கொடைக்கானல்: மனைவியை மிரட்ட தன்னைத் தானே சுட்டுக் கொண்ட கணவர் கைது
கொடைக்கானல்: மனைவியையும், தாயையும் மிரட்ட தன்னைத்தானே சுட்டுக் கொண்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகில் உள்ள அளத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அறிவுச்செல்வம். இவரது இரண்டாவது மனைவி செல்வி. இவர்களுக்கு நான்கு மாத கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது அறிவுசெல்வத்தின் வழக்கமாம்.
வழக்கம் போல், நேற்று காலையும் குடித்து விட்டு வந்த அறிவுச்செல்வத்தை அவரது தாயும், மனைவியும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்காளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியையும், தாயையும் மிரட்டுவதற்காக தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு வந்து ரகளை செய்துள்ளார் அறிவு.
இதில், எதிர்பாராத விதமாக அவரது இடது கையில் குண்டு பாய்ந்தது. இதனால் படுகாயமடைந்த அறிவுச்செல்வம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் பற்றி விபரம் அறிந்த போலீசார் விரைந்து சென்று அறிவுச் செல்வத்தை கைது செய்தனர். அனுமதியின்றி அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியையும், குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.