உடுமலை அருகே அரசு பள்ளியில் மாணவர்களே நடத்தும் 'அற்புதக் கடை'!
திருப்பூர்: உடுமலை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் மாணவர்களே ஒரு அற்புத கடையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில், சோமவராப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்க்க தன்னார்வலர்கள் மூலம் இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பசுமைப்படை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்புகளும் பள்ளியில் செயல்படுகின்றன. மாணவர்களின் நிர்வாகத் திறமையை வளர்க்கும் வகையில், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து பள்ளி வளாகத்திலேயே ஒரு கடை துவங்க முடிவு செய்தனர்.
அதன் விளைவாக ஆசிரியர்கள் பங்களிப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு கடை ஒன்று துவங்கப்பட்டது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த கடையில் மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், காகிதம், வரைபட அட்டைகள் உள்ளிட்டவை லாபம் இன்றி அடக்க விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவசர தேவை கருதி கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் தலையீடு இல்லாமல் கணக்கு பார்ப்பது முதல் பணத்தை பாதுகாப்பது வரை நிர்வாக ரீதியான அனைத்து பணிகளையும் மாணவர்களே மேற்கொண்டு இத்திட்டத்தை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து கடையின் பொறுப்பாசிரியர் ஆலிஷ் திலகவதி கூறுகையில், மாணவர்களிடம் நிர்வாகத்திறன் மற்றும் தன்னம்பிக்கையினை சிறுவயதிலேயே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அங்காடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இதை வெற்றிகரமாக இயக்கி வருவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்கிறார் பெருமை பொங்க.












Click it and Unblock the Notifications