அத்வானியைக் கொல்ல பைப் குண்டு.. தலைமறைவாக இருந்தவர் வத்தலகுண்டு அருகே கைது
வத்தலகுண்டு: மதுரையில் பாஜக தலைவர் அத்வானி வருகை தரவிருந்த நிலையில் திருமங்கலம் அருகே பாலத்திற்குக் கீழே பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தென்காசி ஹனீபா என்பவரை போலீஸார் வத்தலகுண்டு அருகே கைது செய்துள்ளனர்.
மதுரையில் 2011ம் ஆண்டு பாஜக சார்பில் ஊழல் ஒழிப்புப் பேரணி நடந்தது. இதைத் தொடங்கி வைக்க வருகை தந்தார் அத்வானி. பின்னர் அவர் திருமங்கலம் வழியாக செல்வதாக திட்டம் இருந்தது.
இந்த நிலையில் ஆலம்பட்டி ஓடைப் பாலத்திற்குக் கீழே பைப் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வெடிகுண்டு வைக்க உதவியதாக
குண்டு வைக்க உதவியதாக, மதுரை நெல்பேட்டை அப்துல்லா, சிம்மக்கல் தைக்கால் தெரு ஆட்டோ டிரைவர் இஸ்மத் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தந்த தகவலின்பேரில் இமாம்அலி கூட்டாளிகளான "போலீஸ்' பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் ஹக்கீம் என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும் கடந்த மார்ச் மாதம், பக்ருதீன் சகோதரரான நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், வில்லாபுரம் சையது, குப்புப்பிள்ளை தோப்பு முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர திருநகர் ஜாகீர் உசேன் என்பவரும் கைதானார்.
தற்போது இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தென்காசி ஹனீபா என்பவரை வத்தலகுண்டு அருகே உள்ள பரசுராமபுரத்தில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒரு அரிவாள், ஒரு வாள் மற்றும் 2 டெட்டனேட்டர்கள், 2 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தலகுண்டில் ஹனிபாவை கைது செய்ய முயன்ற போது, போலிஸ் டிஎஸ்பியை ஆயுதங்களைக் கொண்டு தாக்க முயன்றாராம். இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications