''போலீஸ்கார்.. லாரியைக் கொடுத்திட்டீங்க.. ஆனா டிரெய்லரை வித்துட்டீங்களே .??''
சென்னை: போலீஸார் பறிமுதல் செய்த லாரி மட்டும் இருக்கிறது. ஆனால் அதனுடன் இணைந்த டிரெய்லரைக் காணவில்லை. இதையடுத்து லாரிஉரிமையாளர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை ராயபுரம் டி.சதிஷ்குமார் தாக்கல் செய்துள்ள மனு:
சென்னை துறைமுகத்திலிருந்து பிற பகுதிகளுக்கு கண்டெய்னர் லாரி மூலம் சரக்குகளை எடுத்துச் செல்லும் தொழில் செய்து வருகிறேன். கடந்த மார்ச் 20-ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து சென்றுகொண்டிருந்த எனது லாரியை காசிமேடு அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஓட்டுநரிடம் வாகனம் தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளனர். எல்லா ஆவணங்களையும் காட்டிய பிறகும் கூட வாகனத்தை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.
அதன் பிறகு நானும் எனது சகோதரர் கார்த்திக்கும் எங்கள் லாரி மற்றும் டிரெய்லரை எடுத்து வருவதற்காக காவல் நிலையத்துக்குச் சென்றோம். ஆனால் அங்கு லாரி மட்டும் இருந்தது. அதனுடன் இணைந்திருந்த டிரெய்லரைக் காணவில்லை. இது குறித்து அங்கிருந்த காவல் துறையினரிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்ததோடு எங்களை மிரட்டியும் அனுப்பினர்.
பின்னர் நாங்கள் விசாரித்தபோது, லாரியிலிருந்து டிரெய்லரை மட்டும் தனியாக கழற்றி, காவல் துறையினர் விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே எனது புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், எனது லாரியை டிரெய்லருடன் சேர்த்து என்னிடம் திருப்பி ஒப்படைக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர்.சுப்பையா, இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் மாநகர காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications