கருணாநிதியை விமர்சிக்கும் பரிதி இளம்வழுதியை அவரது மனசாட்சியே தண்டிக்கும்: மா.சுப்பிரமணியன்

திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக அரசின் 2 ஆண்டுகால மக்கள் விரோத போக்கை கண்டித்து சென்னை புரசைவாக்கத்தில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,
திமுகவில் இருந்து வெளியே சென்ற ஒருவர் கலைஞரை தாத்தா, தாத்தா என்று கூறியிருக்கிறார். தாத்தா என்ற உறவு பெருமை வாய்ந்தது இல்லையா? வாரிசு அரசியல் என்று பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அவருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்தபோது என் அப்பா எம்.எல்.சி.யாக இருக்கிறார் அதனால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டியது தானே?
மு.க. ஸ்டாலின் 84ம் ஆண்டு அல்ல 89ம் ஆண்டு தான் எம்.எல்.ஏ. ஆனார். 84, 89, 91, 96, 2001, 2006ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக இருந்துவிட்டு அமைச்சர் பதவியையும் வகித்துவிட்டு இந்த இயக்கத்தை பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?.
கைலாசபுரத்தில் கொட்டகை வீட்டில் இருந்தவர் தற்போது பாலவாக்கத்தில் தோட்ட வீட்டில் இருக்கிறார். இது யார் போட்ட பிச்சை? தன்னை வளர்த்து ஆளாக்கிய கலைஞரையும், தளபதியையும் விமர்சிக்க எப்படி நாக்கு வந்தது? திமுகவை குறைகூற அவருக்கு தகுதி இல்லை.
எம்.எல்.ஏ., அமைச்சர், துணை சபாநாயகர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு இந்த இயக்கத்தை விமர்சிக்க அவருக்கு எப்படி மனம் வந்தது? அவரது ஆதரவாளர்கள் அந்த இயக்கத்தில் இணைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். திமுகவில் ஒரு தொண்டனின் காலை கூட அவரால் தொட முடியாது.
அதிமுகவில் சேர்ந்தவர்களின் கதை இறுதியில் சோகத்தில் தான் போய் முடியும். பி.சேகர்பாபுவை அவர் கண்காணித்து வருகிறாராம். அவரது கால் தூசியைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது. இங்கு ஒருவனைத் தொட்டால் கூட திமுக தீப்பற்றி எரியும். தனி மனித ஒழுக்கமில்லாதவர் வரம்பு மீறி பேசக் கூடாது. இங்கிருந்து அங்கு சென்றவர்களின் நிலைமையை நாங்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். அவரின் பரிதாப நிலைமையையும் பார்க்கத் தான் போகிறோம்.
அவருக்கு பரிதி இளம்வழுதி என்று பெயர் வைத்தவர் கலைஞர். அவருக்கு சோறு போட்டது இந்த இயக்கம் தான். கலைஞரை விமர்சிக்கும் அவரை அவரது மனசாட்சியே தண்டிக்கும். திமுக என்னும் ஆலமரத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications