தமிழக மாணவர் காங்கிரஸ் மறுதேர்தலை புறக்கணிக்கும் கார்த்தி சிதம்பரம் கோஷ்டி
சென்னை: வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ள மாணவர் காங்கிரஸ் மறுதேர்தலை புறக்கணிக்கப் போவதாக கார்த்தி சிதம்பரம் கோஷ்டி அறிவித்துள்ளது.
தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அணியைச் சேர்ந்த கலையரசன் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் கலையரசன் மாணவரே அல்ல என்றும், அதற்கு ஆதரமாக அவர் கொடுத்த அனைத்து தகவல்களும், ஆவணங்களும் போலி என்றும், எனவே, அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த ராமநாதன் (துணைத் தலைவர்) உள்ளிட்ட 9 பேர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதனால் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கலையரசன் மீது புகார் கொடுத்த 9 பேர் மாணவர் காங்கிரசில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த தகவல் எல்லாம் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து தமிழக மாணவர் காங்கிரசை கலைத்து ராகுல் காந்தி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மாணவர் காங்கிரசுக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை மறுதேர்தல் நடைபெறுகிறது. இதற்காக, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. தேர்தல் அலுவலர்களாக தனுலாகான், மனுஜெயின் ஆகியோர் நிமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் தேர்தலை புறக்கணிப்பதாக கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் மாணவர் காங்கிரஸ் தேர்தலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications