கல்யாண வீட்டில் கள்ள நோட்டைக் கொடுத்து சிக்கிய கும்பல்
திருக்கோவிலூர்: கல்யாண வீட்டுக்கு வந்த ஒரு கள்ள நோட்டுக் கும்பல், அங்கு மொய் எழுதுவது போல நடித்து 1000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்று சிக்கியுள்ளது.
கள்ள நோட்டுக்காரர்கள் பல்வேறு வழிகளில் இப்போது கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்டு வருகின்றனர். ஏடிஎம்மில் கூட இப்போது கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் வருகின்றன.
இந்த நிலையில் கல்யாண வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் கள்ள நோட்டை மாற்ற முயன்று சிக்கியுள்ளது.
திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டியில் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அன்பளிப்பு வழங்கி கொண்டிருந்தனர்.
அப்போது திருமண மண்பத்துக்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் மொய் எழுதுபவர்களிடம் வந்தது. ரூ. 1000 நோட்டை கொடுத்த அவர்கள் 100 ரூபாய் மொய் எழுதுமாறு கூறியுள்ளனர். ஆனால் நூறு ரூபாய் மொய்க்காக ஆயிரம் ரூபாய்த் தாளை அவர்கள் எடுத்து நீட்டியதால் சந்தேகமடைந்த உறவினர்கள், அந்த நோட்டை பரிசோதித்துப் பார்த்தனர். அப்போதுதான் அது கள்ள நோட்டு என்று தெரி வந்தது.
இதைப் பார்த்த கள்ள நோட்டுக் கும்பல் தப்பி ஓட முயன்றது. ஆனால் 6 பேரை மடக்கிப் பிடித்து விட்டனர். ஒருவர் மட்டும் தப்பி விட்டார். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் வந்து 6 பேரையும் பிடித்துச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications