இவன் விட்டாச்சா.. இனி அவன் விடுவான் பாரு....!
லண்டன்: பஸ் ஸ்டாண்ட்டில் பஸ் நின்றதுமே, நம்மவர்கள் முதலில் செய்யும் வேலை சுவரைப் பார்த்து ஓடுவதுதான்... (அப்படி ஓடாதவர்கள் பொருத்தருள்க). அது தன்னிச்சையாக வந்து விடும் போல. பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சா.. அப்பாடா என்று சுவரைப் பார்க்க ஓடிவிடுகிறார்கள்.
அதிலும் ஒருவர் இருவர்தான் போகிறார்களா என்றால்.. கிடையாது... ஒட்டுமொத்த பஸ்ஸுமே அங்கேதான் பாயும்.. வரிசையாக நின்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.
கொட்டாவியும் கூட இப்படித்தானாம். நம் அருகில் இருப்பவர் கொட்டாவி விட்டால் போதும், அதை அப்படியே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் பிக்கப் செய்து ரிலே ரன்னிங் ரேஸ் போல ஆளாளுக்கு கொட்டாவி விட்டு கொண்டாடி விடுகிறார்களாம். ஒருவர் கொட்டாவி விடும்போது அது அருகில் இருப்பவர்களையும் தொற்றிக் கொள்வதாக (contagious) விஞ்ஞானிகள் தற்போது விளக்கியுள்ளனர்.
குடும்பத்தோடு கொட்டாவி
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இந்த கொட்டாவி ஒரு தொற்றுப் பழக்கமாக இருக்கிறதாம்.
ஏன் இப்படி...?
இப்படி ஒருவர் விடும் கொட்டாவி அப்படியே அருகில் இருப்பவர்களுக்கும் பரவுவதற்கு சரியான காரணத்தை விஞ்ஞானிகளால் சொல்ல முடியவில்லை. ஆனால் இது ஒரு செயின் ரியாக்ஷன் போல இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உணர்வுகளைப் புரிந்து கொள்வதால் இப்படியாம்
அதேசமயம், பிசா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்த கோரஸ் கொட்டாவிக்கு புதிய காரணத்தைக் கூறியுள்ளது. அதாவது ஒருவர் உணர்வுகளை இன்னொருவர் புரிந்து கொள்வதன் ஒரு வடிவம்தான் இந்த தொடர் கொட்டாவிக்குக் காரணம் என்கிறார்கள் இவர்கள்.
குழந்தைங்க ரொம்ப விவரமப்பு...
ஆனால் குழந்தைகளிடம் இப்படி தொடர் கொட்டாவிகள் இருப்பதில்லையாம். குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் இந்த கொட்டாவியை தொடர்ச்சியாக காண முடியாதாம்.
குழந்தைங்க மனசு அப்படி
காரணம், குழந்தைகளால் மற்றவர்களின் மன உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போவதால் என்கிறார்கள் பிசா ஆய்வாளர்கள்.
109 பேரின் கொட்டாவியைப் பிடித்து ஆய்வு
இந்த ஆய்வுக்காக ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 109 பேரைப் பிடித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர்கள் விட்ட கொட்டாவியை கண்டு ஆய்வு செய்துள்ளனர்.
என்ன படிக்கிறப்பவே பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸா கொட்டாவி வருதா...