நடிகை லீனாவின் காதலன் சுகாஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

சென்னையை அடுத்த சேலையூரில் ஜவுளிக்கடை வைத்துள்ள சக்கரவர்த்தி என்பவரிடம் கர்நாடக அரசிடம் சீருடை தைக்க அனுமதி வாங்கித் தருவதாக சுகாஷ் சந்திரசேகர் ரூ.54 லட்சம் பண மோசடி செய்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது இது போல பல பண மோசடிகளில் சுகாஷ் சந்திரசேகர் ஈடுபட்டது தெரியவந்தது. கனரா வங்கியில் கர்நாடக அரசின் பெயரைப் பயன்படுத்தி ரூ 19 கோடி மோசடியாகப் பெற்றுள்ளார்.
சுகாஷ் சந்திரசேகர் தலைமறைவான நிலையில் இந்த புகார்கள் தொடர்பாக அவரது காதலி நடிகை லீனா மரியபாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த சுகாஷ் சந்திரசேகரை டெல்லியில் கைது செய்த போலீசார் கடந்த 10-ந்தேதி தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
இதன் மீது நேற்று மாலை விசாரணை நடைபெற்றது. இதற்காக சுகாஷ் சந்திரசேகரை புழல் சிறையில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்து வந்தனர்.
போலீஸ் காவல் குறித்த மனுவை தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாண்டில்யன் விசாரித்தார். சுகாஷ் சந்திரசேகரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். வருகிற 19-ந்தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications