அண்ணனின் நண்பருடன் காதல்... காதலரின் தாய் எதிர்த்ததால் பெண் தற்கொலை
சேலம்: சேலத்தில் தனது அண்ணனின் நண்பரை இளம் பெண் ஒருவர் காதலித்தார். ஆனால் இந்தக் காதலுக்கு காதலரின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம், பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் 18 வயதான பிரியா. இவரும், இவரது அண்ணன் சதீஷின் நண்பர் மணிகண்டன் என்பவரும் காதலித்துள்ளனர்.
இந்த ரகசியக் காதல் மணிகண்டனின் தாயாருக்குத் தெரிய வந்துள்ளது. இந்தக் காதலை எதிர்த்துள்ளார். மேலும் சதீஷையும், அவரது குடும்பத்தினர், உறவினர்களையும் தனியாகப் போய்ச் சந்தித்து பிரியாவை கண்டிப்போடு வைத்திருங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் சதீஷ் வேதனை அடைந்தார். தனது தங்கை பிரியாவை அழைத்துக் கொண்டு வேறு வீட்டுக்குப் போய் விட்டார். ஆனால் மணிகண்டனின் தாயார் செய்த வேலையால் வேதனை அடைந்த பிரியா, வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டு விட்டார். படுகாயத்துடன் அவரை ம்ருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து மணிகண்டன், தாயார் சித்ரா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்ராவைக் கைது செய்தனர். மணிகண்டன் தலைமறைவாகி விட்டார்.












Click it and Unblock the Notifications