5வயது மகனை மூளையை சிதைத்து அடித்து கொடுமைப்படுத்திய தந்தை, சித்தி கைது
இடுக்கி: இரண்டாவது மனைவியோடு கூட்டு சேர்ந்து தனது முதல் தாரத்தின் மூலமாக பிறந்த மகனை கொடுமை செய்த தந்தை மற்றும் சித்தியை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனின் நிலைமை படு மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் செங்காராவைச் சேர்ந்த ஐஸ் வியாபாரியான ஷெரீப்க்கு ஏற்கனவே திருமணமாகி ஷபீன் (7), ஷபீக் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான அலீஷா (26) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார் ஷெரீப். அத்துடன், ஷெரீப் மூலமாக அலீஷாவுக்கு மற்றொரு குழந்தை பிறந்தது.
அதன் பின்னர், ஷபீனை அனாதை இல்லத்தில் சேர்த்த அலீஷா, வீட்டில் இருந்த ஷபீக்கை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கடுமையான காயங்களுடன் குமுளியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான் ஷபீக். பிறகு அச்சிறுவனை மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கட்டப்பனாவில் உள்ள செயின்ட் ஜான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஷபீக் சித்ரவதை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவன் கீழே விழுந்ததில் இவ்வாறு அடி பட்டதாக நாடகமாடிய ஷெரீப் மற்றும் அலீஷாவைக் கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்தனர் போலீசார்.
ஷபீக்கின் உடலில் தீக்காயங்கள் இருந்தன. கால் உடைந்திருந்தது. தலைக்காயம் காணப்பட்டது. உடல் முழுவதும் காயங்களும், நகக்கீறல்களும் இருந்தன. இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஷபீக்கின் உடல்நிலை நேற்று மிகவும் கவலைக்கிடமான நிலையை அடைந்தது. அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவனது மூளைசேதமடைந்து உள்ளது. அடுத்தடுத்து 5 தடவை காக்காய் வலிப்பு ஏற்பட்டது. அவனது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.
பெரும் பரபரப்பை உண்டாக்கிய இக்கொடூர சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் பாதுகாப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கேரள அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சிறார்கள் இதுபோன்ற வன்கொடுமைகளிலிருந்து தப்பிக்க விரைவில் தனிச்சட்டம் உருவாக்கப் படும் என கேரள அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications