தமிழர்களுக்கு எதிரான மெட்ராஸ் கஃபே படம் வெளியாகக் கூடாது.. தமிழர் கட்சிகள் கோரிக்கை
சென்னை தமிழர்களுக்கு எதிரான படம் மெட்ராஸ் கஃபே. எப்படி டேம் 999, விஸ்வரூபம் ஆகிய படங்களுக்குத் தமிழக அரசு தடை விதித்ததோ அதேபோல மெட்ராஸ் கஃபே படத்துக்கும் அரசு தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழர் கட்சிகள், மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. மேலும், மெட்ராஸ் கஃபே இந்திப் படத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாகவும், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாகவும் , தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாகவும் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
இந்த மனுவில் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரம்...

புலிகள் தீவிரவாதிகளா...?
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாகவிருக்கும் மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படம் ஈழ விடுதலையை ஆதரிக்கும் விடுதலை புலிகள் அமைப்பை தீவிரவாதிகளாகவும், அதிலுள்ள தமிழர்களும் தீவிரவாதிகளாகவும் கேடயமாகவும் சித்தரித்திருப்பதாக அவர்கள் வெளியிட்ட முன்னோட்ட காட்சி மூலம் சந்தேகிக்கிறோம்.

ஒருபோதும் ஏற்க முடியாது
தமிழர்களை தீவிரவாதிகளாக வெளி உலகிற்கு காட்ட முயலுவதை நாம் தமிழர் கட்சியோ, தமிழ் மக்களோ, தமிழர்களுக்காக இயங்கும் அமைப்புகளோ ஒரு போதும் ஏற்று கொள்ளாது.

தடை செய்யுங்கள்
ஏற்கனவே டேம் 999 திரைப்படத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை பரப்பியபோது சர்ச்சை ஏற்பட்டு அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது அறிந்ததே. அதே போல் "விஸ்பரூபம்" என்ற படமும் தடை செய்யப்பட்டு சர்ச்சைகுரிய காட்சிகள் நீக்கப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது.

திரையிட்டு காட்ட வேண்டும்
அதே போல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்று இருக்குமேயாயின் தமிழர்கள் நலன் சார்ந்து அப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும். அப்படம் வெளியாவதற்கு முன் தமிழ் அமைப்பு நிர்வாகிகளுக்கு படம் திரையிட்டு காட்டப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அரசுக்குத் தெரிவிக்கப்படும்- கமிஷனர்
மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர், இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் மேற்கொண்டு படத்தை தடை செய்ய நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.

முதல்வர் தலையிட கோரிக்கை
தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் உடனே நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன. இப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் திரை அரங்கத்தில் உள்ள திரைகள் கிழிக்கப் படும் என்றும் மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications