சாதிதான் இந்திய அரசியலை தீர்மானிக்கிறது.. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு அதிக இடம்: கருத்துக்கணிப்பு
மும்பை: இந்திய அரசியலை தீர்மானிப்பது சாதிதான். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை, தொங்கு பாராளுமன்றம்தான் அமையும் என்றும் தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு அதிக இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இடெல்வெய்ஸ் நிதி சேவை நிறுவனம் 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது.
தேர்தலில் சாதியின் பங்கு, கூட்டணியின் முக்கியத்துவம், ஆட்சி முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

வட்டார அரசியல்
தமிழ் நாடு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மத்திய பிரதேசம், கர்நாடகம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் அரசியல் சூழ்நிலை, வட்டார அரசியலை அடிப்படையாகக் இந்த ஆய்வு நடந்தது.

கூட்டணி எப்படி?
பல்வேறு நிர்பந்தங்களின் அடிப்படையில் கூட்டணி உருவாகிறது என்றும் ஆட்சி முறை தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றும் தெரியவந்தது.

சாதிதான் தீர்மானிக்கிறது
மேலும் இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. அதில் இந்திய அரசியலை சாதியே தீர்மானிக்கிறது என்று தெரியவந்துள்ளது.

தொங்கு நாடாளுமன்றம்
2014-ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் மத்தியில் தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

பா.ஜ.க தனிப்பெரும் கட்சி
2014 ல் பா.ஜனதா கட்சி 145 முதல் 155 இடங்கள் வரை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தலித்கள் காங்கிரஸ் ஆதரவு
தலித், ஆதிவாசிகள், மற்றும் இஸ்லாமியர்கள் இடையே காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு காணப்படுவதாகவும், வழக்கம்போல் உயர் சாதியினர் மத்தியில் பா.ஜனதாவுக்கு ஆதரவு காணப்படுவதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதிமுக அதிக இடம்
தமிழகத்தில் திமுகவைவிட அதிமுக அதிக இடங்களையும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைவிட இடதுசாரி கூட்டணி அதிக இடங்களையும் கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

சரியும் ஜனநாயகம்
இதேபோல் 2005 முதல் இந்தியாவில் ஜனநாயகத்தின் அளவு சரிந்து வருவதாக தெற்காசிய மாநில ஜனநாயக அமைப்பு(எஸ்.டி.எஸ்.ஏ.,) நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இலங்கை, நேபாளம், இந்தியா ஆகிய 3 நாடுகளில் நடத்தப்பட்ட ஜனநாயகம் குறித்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 8 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை 55 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது.

ஜனநாயகம்னா
இதையெல்லாம் விட முக்கியமாக 54 சதவீதம் மக்களுக்கு ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியவில்லை. அப்படி என்றால் என்ன என்றுதான் கேட்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 22 க்கும் அதிகமான மாநிலங்களில் உள்ள 5465 பேரிடம் அனைத்து சமூக பிரிவுகளின் கீழும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications