தூத்துக்குடி: முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை... நாய் கடித்து கொன்ற பரிதாபம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முட்புதர் ஒன்றில் அட்டை பெட்டியில் வைத்து வீசப்பட்ட பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள முட்செடிகள் நிறைந்த பகுதியில் ரத்தக்கறை படிந்த ஒரு அட்டை பெட்டியின் அருகே நாய்கள் சூழ்ந்து கொண்டு உருட்டி மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்றவர்களுக்கு லேசான துர்நாற்றம் வீசவே சந்தேகம் அடைந்த அவர்கள் தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அட்டைப் பெட்டியைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அதில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் இருந்தது. மேலும், அக்குழந்தையின் உடல், இரு கால்கள் மற்றும் ஒரு கையை நாய்கள் கடித்திருந்தன. கைப்பற்றிய குழந்தையின் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.
இது தவறான உறவில் பிறந்த குழந்தையா? அல்லது பெண் குழந்தையாக இருப்பதால் அதனை விரும்பாமல் கொலை செய்து முட்புதரில் வீசினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.











Click it and Unblock the Notifications