'பொற்கால ஆட்சி' விளம்பரங்கள்… இனி செய்ய முடியாது… தடை விதிக்க ஆலோசிக்கிறது சட்டக் கமிஷன்!
டெல்லி: ஆட்சிக் காலம் முடியும் நிலையில் உள்ள மத்திய, மாநில அரசுகள், தங்களது ஆட்சியின் கடந்த கால சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து சட்டக் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இது ஆள்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியிலோ, மாநிலத்திலோ ஆள்பவர்கள் ஆட்சி முடிவடையும் தருவாயில் தங்களின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விளம்பரம் செய்வார்கள்.
நாடு ஒளிர்கிறது என்றும், தங்களுடைய ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்றும் தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்வார்கள். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் வீணாவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது சட்டக்கமிஷன்.
சட்டக்கமிஷனின் இந்த திடீர் முடிவு காரணமாக காங்கிரஸ் கட்சிதான்அதிகம் அதிர்ச்சியடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது ஆட்சியின் சாதனைகளை சுமார் 630 கோடி ரூபாய் மதிப்பில் விளம்பரப்படுத்த திட்டமிட்டிருந்தது.
அதேப்போன்று நவம்பர் மாதம் சட்டசபை பதவிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ள சில மாநிலங்களில், ஆட்சி நடத்தும் கட்சிகள் பலகோடி செலவில் விளம்பரம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் அந்த மாநில அரசுகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.
இதனிடையே டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தனது ஆட்சி கால சாதனைகளை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக கூறி, ஷீலா தீட்சித்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுமாறு பாரதீயஜனதா கட்சி நீதிமன்றத்தை அணுகி உள்ளது.
இருப்பினும் அனைத்துக்கட்சிகளும் இது தொடர்பான தங்களது கருத்துக்களை ஜூலை 31 க்குள் தெரிவிக்க வேண்டும் என அது கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications