எய்ம்ஸ் வழக்கு தீர்ப்பால் இட ஒதுக்கீடுக்கு ஆபத்து: டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Ramadoss
சென்னை: எய்ம்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும், இடஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகப் பேராசிரியர்கள் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தாம் ஓய்வுபெறும் நாளில் அவசர அவசரமாக அளித்த தீர்ப்பு அதிர்ச்சியையோ, ஏமாற்றத்தையோ அளிக்கவில்லை. மாறாக, வேதனையையும், கோபத்தையும் மட்டுமே அளித்திருக்கிறது. இதற்குக் காரணம் இதன் பின்னணியில் நடைபெற்ற சில சதிகள்தான்.

டெல்லியில் உள்ள மருத்துவ அறிவியல் கழகம் எப்போதுமே இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறது. இதற்கு அந்த அமைப்பின் உயர் பொறுப்பில் இருந்தவர்களும் ஆதரவு அளித்து வந்திருக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டில் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் மையத் தளமாக விளங்கியது எய்ம்ஸ் எனப்படும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்தான்.

இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் மட்டுமே இந்த அமைப்பின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், இந்த அமைப்பின் தலைவராகவும் இருந்தபோதுதான் 50 ஆண்டுகளில் முதன் முறையாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆர்.சி. டேக்கா என்பவர் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகே எய்ம்ஸில் இடஒதுக்கீட்டை முறைப்படுத்த முடிந்தது.

ஆனால், அங்கு பணியாற்றி வரும் பேராசிரியர்களில் பெரும்பாலானோர் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் என்பதால், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கடந்த பல ஆண்டுகளாகவே போராடி வந்தனர். இதற்காக எய்ம்ஸ் பேராசிரியர்கள் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை அளித்திருக்கிறது.

இந்த வழக்கில், இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசோ, எய்ம்ஸ் நிர்வாகமோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், எய்ம்ஸ் நிர்வாகமும் உச்ச நீதிமன்றத்தில் பெயரளவில் மனுத்தாக்கல் செய்தபோதிலும், இவ்வழக்கில் தோல்வியடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் பின்வாசல் வழியாக மேற்கொண்டன.

நீதிமன்ற விசாரணையின்போது, இடஒதுக்கீட்டிற்கு வலுசேர்க்கும் வாதங்களை முன்வைக்க மத்திய அரசு தவறிவிட்டது. உச்ச நீதிமன்றமும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிப்பதில் நிதானம் காட்டாமல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுப் பெறப்போவதை காரணம் காட்டி, தேவையற்ற அவசரத்தை கடைபிடித்தது. இறுதியில் அனைவரும் எதிர்பார்த்தவாறே இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பு சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதற்கு சமமாகும்.

இட ஒதுக்கீடுக்கு ஆபத்து

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, எய்ம்ஸ் நிறுவனத்துடன் முடிந்துவிடாது. இந்தியாவில் உள்ள மற்ற மருத்துவ கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், மத்திய- மாநில பல்கலைக்கழகங்கள் என அனைத்து அமைப்புகளிலும் ஆசிரியர் பணிக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கு அடிப்படையாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது.

நீதித்துறையிலேயே இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தியுள்ள நிலையில், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

மறு ஆய்வு மனு

எனவே, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் மீதும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீதும் பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு உண்மையான அக்கறை இருந்தால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யவும், இடஒதுக்கீட்டை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+