பொது சொத்துக்களுக்கு சேதம்: பாமக மீதான 142 வழக்குகள்.. டாக்டர் ராமதாஸ் நாளை ஆஜராவரா?

ஏப்ரல் மாதம் சித்திரைப் பெருவிழாவைத் தொடர்ந்து மரக்காணத்தில் இருவேறு பிரிவினரிடையே வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸ் நடவடிக்கையை கண்டித்து விழுப்புரத்தில் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டம் செய்தார். தடையை மீறி போராட்டம் நடத்திய அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வடமாவட்டங்களில் பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மரங்கள் வெட்டப்பட்டன. பேருந்து கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.
இதையடுத்து தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992-ன் படி இழப்பீட்டு தொகையை பாமகவிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. இதன்படி வருவாய்துறை நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் சிவில் நீதிபதியாக இருந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த 1-ம் தேதியும், 2-ம் தேதியும் 80 வழக்குகள் தொடர்பாக விசாரித்தார். இந்த வழக்கு 30-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், விழுப்புரம், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக 142 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் மீதான 3 நாள் விசாரணை நாளை (செவ்வாய்) தொடங்குகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜர் ஆகுமாறு டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இருதய அறுவை சிகிச்சை செய்து ஓய்வு பெற்று வரும் டாக்டர் ராமதாஸ் நாளை ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications