கட்சியின் ‘சித்தாந்தத்துக்கு’ அப்பாற்பட்டு பேசக் கூடாது: ராகுல் அட்வைஸ்!

டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், நிர்வாகிகளுக்கான 2 நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய ராகுல், புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். கட்சியின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தங்களுடைய புகழையும் தானாக வளர்த்துக் கொள்ள முடியும்.
எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும், கட்சியினர் அனைவரும் ஒருமித்த குரலில் பேச வேண்டும். யாரும் தங்களை தனிப்பட்ட நபராக முன்னிலைப்படுத்திக் கொள்ளக் கூடாது. கட்சியை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும். அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துக் கூற வேண்டும். இதற்காக பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய சமூக இணையதளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்களைக் கவர முடியும்.
எந்த ஒரு விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையில் சொந்தக் கருத்து இருக்கலாம். ஆனால், கட்சி என்று வரும்போது, கொள்கைகளுக்கு உள்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டும். கட்சியின் சித்தாந்தத்துக்கு அப்பாற்பட்டு கருத்து தெரிவிக்கக் கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே ராகுலும் பிரியங்காவும் அமேதி தொகுதிக்கு மூன்று நாள் பயணமாக செல்கின்றனர். அங்கு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications