மோடிக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்து..யெச்சூரியே இப்படி பேசலாமா? கொந்தளிக்கும் முகமது ஆதீப்!
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா தரக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு 65 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில் தமது கையெழுத்தை கட் அண்ட் பேஸ்ட் செய்து ஒட்டிவிட்டதாக மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் யெச்சூரி கூறியுள்ளார். ஆனால் யெச்சூரி போன்ற ஒரு மூத்த தலைவர் இப்படியெல்லாம் பேசலாமா? அப்புறம் நான் கோர்ட்டுக்குப் போவேன் என்று பொங்கியிருக்கிறார் சுயேட்சை ராஜ்யசபா எம்.பியான முகமது ஆதீப்.
அமெரிக்காவுக்கு 65 எம்.பி.க்கள் பேக்ஸ்
ராஜ்யசபா சுயேட்சை எம்.பியான முகமது ஆதீப்பின் முன் முயற்சியால் கடந்த ஆண்டு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 12 கட்சிகளின் 65 எம்.பிக்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். அதில் குஜராத் முதல்வர் மோடிக்கு அமெரிக்கா விசா தரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த 65 பேரில் 9வது நபராக சீதாராம் யெச்சூரி பெயரும் இருந்தது.
ராஜ்நாத்தின் மும்முரம்
தற்போது அமெரிக்கா சென்றுள்ள பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், மோடிக்கு விசா எப்படியும் வாங்கிவிடுவது என்ற லாபியில் ஈடுபட்டு வருகிறார். மீண்டும் பேக்ஸ் இதற்கு செக் வைக்கும் வகையில் மீண்டும் கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட 65 எம்.பி.க்களின் கையெழுத்துடன் கூடிய பேக்ஸ் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சீதாராம் யெச்சூரி மறுப்பு
அமெரிக்காவில் உள்ள இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் நிறுவனரான இந்தியர் ஷேக் உபைத் மூலமாக அமெரிக்க அரசிடம் இக்கடிதம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சீதாராம் யெச்சூரி கையெழுத்து செய்திகள் வெளியாகி இருந்ததை அவர் மறுத்துள்ளார். மேலும் தமது கையெழுத்தை கட் அண்ட் பேஸ்ட் செய்து ஒட்டிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
கொந்தளித்த முகது ஆதீப்
ஆனால் கையெழுத்து பெற்ற எம்.பி. முகது ஆதீப்போ, 6 மாதங்களுக்கு முன்பு கையெழுத்திட்டதை யெச்சூரி மறந்துவிட்டார் போல என்று கூறியிருப்பதுடன் நான் ஒரு ராஜ்யசபா எம்.பி. இந்த மாதிரி கட் அண்ட் பேஸ்ட் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை...அவர் வேண்டுமானால் என்னை ஏமாற்ற நினைக்கலாம். ஆனால் நான் கோர்ட்டுக்குப் போய்விடுவேன்.. யெச்சூரி போன்ற ஒரு மூத்த தலைவரிடம் இருந்து இப்படியான ஒரு கருத்து வரும் என நான் நினைத்தே பார்க்கவில்லை என்றார்.
ராமலிங்கம் மறுப்பு
இதேபோல் திமுக எம்.பி.யான கே.பி. ராமலிங்கமும் தாம் கையெழுத்துப் போடவில்லை என்று மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் 2வது இடத்தில் ராமலிங்கம் பெயர் உள்ளது. அதற்கு நேரே ராமலிங்கம் என தமிழிலேயே கையெழுத்து போடப்பட்டுள்ளது.
எம்.பிக்கள் கடிதம் சரியே
இந்த கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவில் இருக்கும் ஷேக் உபைத், மனித உரிமைகள் என்பது உலகம் முழுவதும் ஒன்றுதான். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. குஜராத் கலவரத்துக்கு காரணமான ஒருநபர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்துவோம். இந்திய எம்.பிக்களின் கடிதம் சரியான ஒன்றுதான் என்றார்.












Click it and Unblock the Notifications