என்.எல்.சி. பங்கு விற்பனை விவகாரத்தில் ஜெ. மட்டும் அவசரப்படாமல் இருந்திருந்தால்...: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

NLC issue: I'm not jealous of Jaya: Karunanidhi
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மட்டும் அவசரப்பட்டு பிரதமருக்கு கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் திமுக ஆட்சியில் நடந்ததைப் போன்று மத்திய அரசு தானாகவே முன்வந்து என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை திரும்பப் பெற்றிருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நெய்வேலி நிறுவனப்பங்கு விற்பனை தொடர்பாக முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் பற்றி எனக்கு எந்தவிதமான காழ்ப்புணர்வோ, ஆதங்கமோ சிறிதும் கிடையாது. நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பிரச்சினையில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகள் எதுவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கேட்கப்பட்டது அல்ல.

சுருக்கமாக நான் கேட்கிறேன்; நெய்வேலி பங்குகளை விற்க முதலில் மத்திய அரசு முடிவு செய்து, பின்னர் மத்திய அரசே அதைத் திரும்பப் பெற்றது திமுக ஆட்சிக் காலத்தில் தானே; தற்போது அதுபோல மத்திய அரசின் முடிவினைத் திரும்பப் பெறச் செய்யவில்லையே?. இது யாருக்கு வெற்றி?. யாருக்குத் தோல்வி?.

15-7-2013 அன்று மாலையில் தான் நெய்வேலி பிரச்சினையில் உடன்பாடு ஏற்பட்டு அன்றிரவு 7 மணிக்கு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள். 16-ந் தேதியே காலை ஏடுகளில் தான் அந்தச் செய்தியே வெளிவருகிறது. ஆனால் 16-7-2013 அன்று காலையில் வெளிவந்த ஆளுங்கட்சி நாளிதழில் தான் முதல்-அமைச்சர் ‘‘எனது தனிப்பட்ட முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி'' என்று விடுத்த அறிக்கையே முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நெய்வேலி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முதலில் முடிவெடுத்து, பிறகு அந்த முடிவினைத் திரும்பப் பெற்றது குறித்து பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டபோது, ‘‘என் தனிப்பட்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றி'' என்று நான் கூறிக்கொள்ளவில்லை. மாறாக ‘‘இது வியர்வைக்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி'' என்று அடக்கத்தோடு கூறினேன்.

இப்போதும் கூறுகிறேன். முதல்-அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதைப்போல எனக்கு ஆதங்கமோ, அரசியல் காழ்ப்போ, பொறாமையோ, விரக்தியோ நிச்சயமாகக் கிடையாது. ஆனால் நமது முதல்-அமைச்சர் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ‘‘எனது தலைமையிலான அரசு''-‘‘என்னுடைய தனிப்பட்ட முயற்சி''-‘‘முதல்-அமைச்சரின் உத்தரவு''-என்றுதான் கூறிக்கொள்வார். அதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி, பெருமை.

நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக்கொள்ளத் தயார் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால், நெய்வேலித் தொழிலாளர்களின் ஒற்றுமையான, ஒட்டுமொத்தப் போராட்டம் காரணமாகவே, மத்திய அரசு தானாகவே முன்வந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் திரும்பப் பெற்றதைப் போலவே தற்போதும் திரும்பப் பெற்றிருக்கும் என்பது உண்மையா?. இல்லையா?. இந்த வாய்ப்பு முதல்-அமைச்சர் எழுதிய அவசரக் கடிதம் காரணமாக தவறிப் போய்விட்டது என்பது தான் பலரின் கருத்து என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+