பாலிஷ் போடும் சாக்கில் எஸ்.ஐ. மாமியாரின் ஏழரை பவுன் தாலி செயின் அபேஸ்
சேலம்: ஆத்தூர் அருகே போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மாமியாரிடம் பாலிஷ் போடுவதாகக் கூறி ஏழரை பவுன் தாலி சங்கிலி, அரை பவுன் மோதிரத்தை எடுத்துக் கொண்டு ஓடிய 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது வைத்தியகவுண்டன்புதூர். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவரது மனைவி தங்கமணி(50). அவர்களின் மருமகன் கணேசன். அவர் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
நேற்று பகல் 11 மணிக்கு தங்கமணி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் தங்க நகைக்கு பாலிஷ் போட்டுத் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து தங்கமணி தன் கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தாலி சங்கிலி மற்றும் அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை பாலிஷ் போட அந்த வாலிபர்களிடம் கொடுத்துள்ளார்.
நகையை தாங்கள் வைத்திருந்த தண்ணீரில் போட்ட அந்த 3 பேர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தங்கமணி வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவர்கள் நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இது குறித்து தங்கமணி ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications