தா. கிருஷ்ணன் கொலை வழக்கு: அழகிரி விடுதலையை எதிர்த்து அதிமுக அரசு மேல்முறையீடு
திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி மதுரை கேகே நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வந்தபோது கொலை செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய அண்ணா நகர் போலீசார் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, திமுக நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்பட 13 பேரை கைது செய்தனர். மு.க. அழகிரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த 2006ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த வழக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சித்தூர் நீதிமன்றம் அழகிரி உள்ளிட்ட 13 பேரை விடுதலை செய்து கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா அதிமுக ஆட்சிக்கு வந்தால் தா. கிருஷ்ணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும், குற்றவாளிகள் யாரும் தப்பவே முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து மேல்முறையீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மேல்முறையீடு செய்யத் தேவையான ஆவணங்களை மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் விசாரணை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.
சித்தூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால் காலமாதம் காரணமாக மேல்முறையீட்டு அனுமதி கோரி மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை மதுரை திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.