தமிழதத்தில் அதிகரித்து வரும் கொலை சம்பவங்கள் கவலை அளிக்கிறது: தா. பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.
அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் படுகொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையளிக்கிறது. அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்படுகின்றனர். மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களின் கொள்ளையைத் தடுக்க முயலும் அரசியல் கட்சிகளின் ஊழியர்கள், அரசு அலுவலர்கள் கொல்லப்படுகின்றனர். கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஜாதிய சக்திகளும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றன.
வீடுகளில் தனியாக இருக்கும் முதியவர்கள் நகைகள், பணத்துக்காக கொல்லப்படுகின்றனர். வரதட்சிணைக் கொலையும் தொடர்கிறது.
திறமை மிக்கதாகக் கருதப்படும் தமிழக காவல்துறை கொலைகளைத் தடுக்கத் தவறியதோடு, கொலைக்கான காரணங்களையும், கொலையாளிகளையும் கண்டுபிடித்து மக்கள் முன் நிறுத்த முடியாமல் இருப்பது வியப்பளிப்பதோடு பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சிக்காமல் தப்பிவிடலாம் எனும் நம்பிக்கை வந்துவிட்டால் கொலைகளை எப்படி தடுக்க முடியும்.
தமிழக அரசு இவ்விஷயத்தில் அக்கறை செலுத்தி, நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் குற்றாவளிகளைக் கண்டறியவும், குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடல் உழைப்புத் தொழிலாளர்களின் நலனை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வரும் 30-ஆம் தேதி மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications