காதல் திருமணம் செய்த ஊராட்சி தலைவி எஸ்.பி ஆபிசில் தஞ்சம்
விழுப்புரம்: காதல் திருமணம் செய்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவியும், அவரது கணவரும், உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி விழுப்புரம் எஸ்.பி.யிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்களம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி. வயது 23. இவர் பள்ளிப்புதுப்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.
கனிமொழியும் அதே கிராமத்தை சேர்ந்த வேல்முருகனும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு கனிமொழியின் பெற்றோர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு இருந்தது. இதையடுத்து கனிமொழி தனது காதலருடன் கடந்த 13ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மைலம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கனிமொழியின் தந்தை, தன் மகளை வேல்முருகன் கடத்தி சென்றுவிட்டதாக கண்டமங்களம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, கண்டமங்களம் போலீசார் வேல்முருகனை தேடி கிடைக்காததால், அவரின் உறவினர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
காதலர்கள் ஊருக்கு திரும்பி வந்தால் அவர்களை கொலை செய்துவிடுவேன் என்று கனிமொழியின் தந்தை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காதல் ஜோடியினர் விழுப்புரம் எஸ்.பி.டம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவியே பாதுகாப்பு கேட்டு எஸ்.பியிடம் தஞ்சம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications