மோடி பிரதமராவதை தடுப்பேன்- ராகுல்தான் மிகவும் பொருத்தமானவர்: லாலு
பாட்னா: நாட்டின் பிரதமர் பதவிக்கு மோடி வருவதை எப்படியும் தடுப்பேன் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
நாட்டின் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியும் நரேந்திர மோடியும் தகுதியானவர்கள் அல்ல என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விமர்சித்திருந்தார். இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்திக்கு பிரதமர் வாய்ப்பை இந்திய மக்கள் கொடுக்க வேண்டும்.

ராகுல் காந்திக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை. ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர் சிறந்த பிரதமர் என்பதை நிருபித்து காட்டுவார். பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி மிகவும் பொருத்தமானவர். அவர் மிகவும் திறமையான தலைவர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராவதை எப்படியும் தடுப்பேன். அதற்கான அனைத்தையும் செய்வேன். நான் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறேன். ஆனால் ஏழைகள் தொடர்பான அக்கட்சித் தலைவர்கள் கூறி வரும் கருத்தை ஏற்க முடியாது. நாட்டில் இரண்டு வேளை உணவு கூட கிடைக்காத ஏழைகள் இருக்கின்றனர்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பள்ளிக்கூட மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார். பீகாரில் என்ன மோசமான நிகழ்வுகள் நடைபெற்றாலும் அதற்கு எதிர்க்கட்சிகளையே குறை கூறுகிறார் நிதிஷ்குமார். இது துரதிருஷ்டவசமானது என்றார்.












Click it and Unblock the Notifications