லோக்சபா தேர்தல்: அதிமுக- 29 திமுக 5- தேமுதிக- 2 தொகுதிகள்: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் அதிமுக 29 இடங்களைக் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பது பற்றி அண்மையில் தி ஹிண்டு- சி.என்.என். ஐபிஎன் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு நடத்தியது. இதைத் தொடர்ந்து டைம்ஸ்நவ்- சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தமிழகம் தொடர்பாக வெளியான முடிவுகள் இவை:
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆளும் அண்ணா திமுக மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 29 தொகுதிகளைக் கைப்பற்றும். கடந்த முறை அதிமுக 9 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது.
கடந்த முறை 18 இடங்களைக் கைப்பற்ற திமுக, இம்முறை 5 இடங்களைத்தான் பெறும். தேமுதிகவுக்கு 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதிதான் கிடைக்குமாம்! தற்போது தேர்தல் நடைபெற்றால் தேமுதிக தமது 'டெல்லி' கணக்கை தொடங்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறதாம்!
தி ஹிண்டு-சி.என்.என்.ஐபிஎன் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் அதிமுகவுக்கு 20 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.