பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மன்மோகன்சிங் உறுதி
டெல்லி: நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்துக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான பிரதமரின் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, பாரதி குழுமத்தின் சுனில் மிட்டல் தொழிலதிபர் ராகுல் பஜாஜ், ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், எச்டிஎப்சி தலைவர் தீபக் பரேக், இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி, விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வளர்ச்சிக்கு திரும்பும் அறிகுறி இல்லையே
தொடக்கத்தில் பேசிய தொழிலதிபர்கள் பலரும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தனர்.

சீர்திருத்த நடவடிக்கை
தொழிலதிபர்களின் கவலைக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைக்கவும் தொழில் துறை மந்த நிலைப் போக்கவும், ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

எப்படியும் 8% பொருளாதார வளர்ச்சி
மேலும் மீண்டும் 8% மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுதான் தொழில் துறையினரின் விருப்பமும் ஆகும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை விரைவாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் விளக்கம்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினர். இந்தக் கூட்டத்தில் அரசின் முடிவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவரும் எச்எஸ்பிசி தலைவருமான நைனா லால் கித்வாய் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications