மோடிக்கு எதிரா தீயா பிரச்சாரம் செய்யணும்... குஜராத்தில் ராகுல் உத்தரவு
நாடாளுமன்றத்தின் லோக்சபா தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக மாநில வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பிரச்சார யுக்திகளை தெரிவித்து வருகிறார்.
நேற்று குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம் ராகுல்காந்தி பேசியதாவது:
மக்கள் நல திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசு குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
மோடிக்கு எதிராக
குஜராத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். நரேந்திர மோடி பற்றியும் அவரது செயல்பாடு பற்றியும் அடுத்த 3 மாதத்துக்கு மக்களிடம் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும். மாநிலத்தில் உள்ள அடிமட்ட கிளை வரை இந்த உணர்வை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்படுத்த வேண்டும்.
நெருக்கடி கொடுங்க
முக்கிய பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.
குறிப்பாக மோடி செய்யும் அரசியல் நாட்டு ஒற்றுமைக்கு எதிரானது என்பதை சொல்ல வேண்டும். காங்கிரஸ் நிர்வாகிகள் செய்யும் இந்த பிரசாரம்தான் முக்கியமானது இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.