வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பு

2013-2014ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நீட்டித்து நிதி அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் வருமான வரி கணக்கை நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ தாக்கல் செய்யலாம். அதே சமயம் ரூ.5 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னையில் வருமான வரி கணக்கை செலுத்துவோரின் வசதி கருதி நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் 34 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன. கவுண்ட்டர் திறந்த அன்று 9,025 பேரும், மறுநாள் அதாவது நேற்று 11, 648 பேரும் கணக்கை தாக்கல் செய்தனர்.
இது தவிர தனியார் உதவியுடன் ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆயக்கார் பவன் வளாகத்தில் சிறப்பு மையத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ. 250 கட்டணத்தில் ஏராளமானோர் கணக்கை தாக்கல் செய்தனர்.
இன்று காலை 9.30 மணிக்கு திறக்கப்பட்ட சிறப்பு கவுண்ட்டர்கள் மாலை 5.30 மணி வரை செயல்படும். மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களின் வசதிக்காக ஆயக்கார் பவன் வளாகத்தில் உள்ள சேவா கேந்திராவில் சிறப்பு கவுண்ட்டர்கள் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications