முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து போட்டுத் தள்ள தலிபான் அதிரடி திட்டம்!
இஸ்லாமாபாத்: முன்னாள் அதிபர் முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புமிக்க சிறைக்குள் புகுந்து தாக்கியதால் தெம்பாகியுள்ள தீவிரவாதிகள் அடுத்தடுத்து பெரிய தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருகின்றனராம்.
முஷாரப்பின் பண்ணை வீடும் தாக்குதல் திட்டத்தில் உள்ள ஒன்று என்று கூறப்படுகிறது.
ஏகப்பட்ட வழக்குகளில் முஷாரப்
முஷாரப் மீது ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் தற்போது சக் சஷாத் பண்ணை வீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த வீடு துணைச் சிறைச்சாலையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அமைப்புகள் திட்டம்
முஷாரப்பின் இந்த பண்ணை வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கிக் கொல்ல தெஹரீக் இ தலிபான் பாகிஸ்தான், சிபா இ சஹாபா பாகிஸ்தான் ஆகிய இரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளனவாம்.
அத்தனை துறைகளும் அலர்ட்
முஷாரப்பைக் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்தியைத் தொடர்ந்து அப்படி ஏதும் நடந்து விடாமல் தடுக்கும் வகையில் அத்தனை துறைகளையும் பாகிஸ்தான் அரசு உஷார்படுத்தியுள்ளதாம்.
தலிபான் லிஸ்ட்டில் நம்பர் ஒன் எதிரி முஷாரப்
தலிபான்களின் எதிரிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முஷாரப். 2007ம் ஆண்டு லால் மசூதியில் நடந்த தாக்குதலால் அவர் மீது தலிபான்கள் கடும் கொதிப்பில் உள்ளனர். அந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 முறை தப்பியவர்
3 முறை கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியவர் முஷாரப்.