ஹஜ் யாத்திரைக் குழுவுக்கான மானியம் ரூ. 30 லட்சமாக உயர்வு- ஜெ.
சென்னை: ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் குழுவுக்கான மானியத் தொகையை ரூ. 30 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு....
சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலும், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் உலமா ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியது; மாதாந்திர ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயாக உயர்த்தியது.
வக்ப் வாரியத்தின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையை 1 கோடி ரூபாயாக உயர்த்தியது; நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்காக ஒட்டு மொத்தமாக 3 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியது;
ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதரவற்ற முஸ்லீம் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் சுயமாக சிறு தொழில்கள் செய்திட, விலையில்லா தையல் இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திரங்கள், மருத்துவ உதவித் தொகை, முதலியன வழங்க ஏதுவாக முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்படும் நன்கொடைக்கு ஈடாக அரசால் 1:1 என்ற விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த இணை மானியத் தொகையை, 1.4.2012 முதல் 1:2 விகிதத்தில் இருமடங்காக உயர்த்தியும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்படும் மானியத் தொகையின் உச்ச வரம்பை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தேனி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திருவாரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி ஆதாரங்களுக்கு 1.4.2012க்கு முன்னர் அந்த சங்கங்கள் வசூலித்த நன்கொடைக்கு 1:1 என்ற விகிதாச்சார அடிப்படையிலும், 1.4.2012க்கு பின்னர் வசூலிக்கப்பட்ட தொகைக்கு 1:2 என்ற விகிதாச்சாரத்திலும் இணை மானியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கென 49 லட்சத்து 68 ஆயிரத்து 347 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரைக்கு செல்லும் பயணிகளை தேர்வு செய்வது, மற்றும், தேர்வு செய்யப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு மெக்கா சென்று பாதுகாப்பாக திரும்புவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்ட குழுதான் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு. இக்குழு தனது பணிகளை செவ்வனே ஆற்றுவதற்காக அரசால் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மூன்றாம் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றவுடன், சிறுபான்மையின மக்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஹஜ் புனித யாத்திரை சிறப்புற அமைய இக்குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தினை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
சிறுபான்மையின மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் மானியத்தினை 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications