அம்மா, ரொம்ப நன்றி அம்மா: காவேரி வெள்ளத்தில் சிக்கி காப்பாற்றப்பட்ட 4 பேர் ஜெ.வுக்கு நன்றி

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடந்த சில நாட்களாக காவேரி நீர்பிடிப்புப் பகுதியில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, கர்நாடக அணைகளிலிருந்து அதிகளவில் நீர் திறந்து விடப்படுகிறது.
எனவே, ஒகேனக்கல் நீர் அருவிப் பகுதியில் குளிக்கத் தடை விதித்ததுடன் அந்தப் பகுதியை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது. தாழ்வான பகுதியிலிருந்து மக்களும் மேடான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் 4.8.2013 அன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் மாதப்பன் ஓகேனக்கல் பகுதியில் காவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் மரக்கிளையில் தொற்றிக் கொண்டார்.
இதனை அறிந்தவுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை உதவியுடன் மாதப்பனைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையில், தன்னிச்சையாக இவரைக் காப்பாற்ற ஊட்டமலையைச் சேர்ந்த பரிசல் ஓட்டிகள் மாதவன் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன், கோவிந்தன் என்பவரின் மகன் முத்து, ராமசாமி என்பவரின் மகன் சகாதேவன் ஆகியோர் ஒரு பரிசலில் சென்றனர்.
இருப்பினும், வெள்ளப் பெருக்கில் பரிசலை இயக்க முடியாமல் ஆற்றின் குறுக்கே உள்ள தீவு போன்ற மேடான பாறை மற்றும் மரங்களுக்கு இடையில் இந்த மூவரும் ஒதுங்கினர்.
இந்தச் செய்தியை அறிந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் பணிக்குழு உதவியுடனும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமும் நால்வரையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இவர்களை மீட்பதற்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் பணிக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அக்குழுவை சேர்ந்த 47 நபர்கள் 4.8.2013 நள்ளிரவில் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். அந்த சமயத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால், மீட்புப் பணியில் சிக்கல் நீடித்தது.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி கோயம்புத்தூர் மாவட்டம், சூலூரிலிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதன் விளைவாக, ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாதப்பன், பரிசல் ஓட்டிகள் ராமகிருஷ்ணன், முத்து, சகாதேவன் ஆகிய நால்வரும் இன்று (5.8.2013) காலை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் மீட்கப்பட்டனர். இவர்கள் நால்வரும் மருத்துவ சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காவேரி வெள்ளப் பெருக்கில் சிக்கிய தங்களைக் காப்பாற்ற அதி விரைவாக நடவடிக்கை எடுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உயிர் பிழைத்த நால்வரும், அவர்தம் உறவினர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications