'டாக்' தொழிற்சாலையை அரசு ஏற்கக் கோரி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
தூத்துக்குடி: தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி ஸ்பிக் உர தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனமாக தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் பெர்ட்டிலைசர்ஸ் (டாக்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சோப்பு, கண்ணாடி தயாரிப்பிற்கான சோடாஸ் கெமிக்கல், அமோனியம் குளோரைடு உரம் ஆகியவை உப்பை மூலதனமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.
டாக் தொழிற்சாலை இயக்குவதற்கு ஸ்பிக் தொழிற்சாலையிலுள்ள யூரியா பிளாண்ட் இயக்குவது கட்டாயமாகும். ஆனால் ஸ்பிக் நிறுவனம் யூரியா பிளாண்டில் உற்பத்தியை நிறுத்தி வைத்து, டாக் தொழிற்சாலையின் உற்பத்தியையும் நிறுத்தி வைத்துள்ளதை தொடர்ந்து ஆலை மூடப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில் டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்தவேண்டும், தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாக் தொழிலாளர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு துவங்கிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு டாக் தொழிலாளர்கள் சங்க தலைவர் துரையரசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் துரை முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாநில செயலாளர் காசிவிஸ்வநாதன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
இதில், டாக் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், சர்வகட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications