உணவுப் பொருள் பெயரில் தென்கொரியாவிலிருந்து வந்த ரூ. 1 கோடி மதுபானம் பறிமுதல்
தூத்துக்குடி: போலியான உணவுப்பொருள் பெயரில் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான ஒருகோடி ரூபாய் மதிப்பிலான தென்கொரிய மதுபான பாட்டில்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சரக்குகள் இறக்குமதியாகிறது. இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கப்பலில் தென்கொரியாவில் இருந்து பெப்பர் பேஸ்ட் என்ற பெயரில் உணவுப் பொருட்கள் இறக்குமதியானது.
இந்த கன்டெய்னரை தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். சோதனையின்போது கண்டெய்னரில் இருந்த 1410 அட்டை பெட்டிகளில் 800 பெட்டிகளில் தென்கொரியா நாட்டின் ஜோஜூ வகை மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 800 அட்டைபெட்டிகளில் இருந்த உயர் ரக மதுபான பாட்டில்களான 32ஆயிரம் மது பாட்டில்களையும் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். 360 மில்லி அளவு கொண்ட இந்த மதுபாட்டில்களின் சர்வதேச மதிப்பு ஒருகோடி ரூபாயாகும். இதில் தொடர்புடைய இறக்குமதியாளர்கள் இருவரை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த தகவலை தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications