அடையாறு ஆற்றில் குதித்து சாப்ட்வேர் எஞ்ஜினியர் தற்கொலை? உடலை கண்டுபிடிக்க முடியாமல் குழப்பம்

கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சுபாஷ் சுப்ரமணியன் கணிணிப் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் நேற்று மாலை 3 மணியளவில் தனது குடும்பத்தினருக்கு போன் செய்துள்ளார். அப்போது கோட்டூர்புரம் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.
உடனடியாக அங்கு வந்த அவரது உறவினர்கள் சுபாஷின் செருப்பு, பைக் ஆகியவை மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தும் தற்கொலை செய்து கொண்டவரின் உடல் மீட்கப்படவில்லை. ஆனால் செல்போன் மட்டும் தொடர்பிலேயே இருந்தது. இதனால் போலீசார், சுபாஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வீட்டை விட்டு வேறு எங்கேனும் சென்றுவிட்டாரா என்று தேடி வருகின்றனர்.
அவரது செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் அது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சுபாஷின் செல்போன் இதுவரை சுவிட்ஆப் செய்யப்படவில்லை. அவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதை யாரும் பார்த்ததாக இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை எனவே திங்கட்கிழமை காலையிலும் போலீசார் சடலத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளனர். சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் சுபாஷின் தந்தை மரணமடைந்து விட்டார். அதிலிருந்தே மனமுடைந்து காணப்பட்ட சுபாஷ் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இதே பாலத்தில் இருந்து குதித்து பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை செய்து கொண்டார். கடந்த வாரம் குழந்தை தள்ளிவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications