மதுரைக்காரவுங்களுக்கு ரத்தக் கொதிப்பு ஓவரா இருக்காம்...!
மதுரை: மதுரை மக்களிடையே பிபி எனப்படும் ரத்தக் கொதிப்பு பிரச்சினை அதிகரித்து வருகிறதாம்.
நகர்ப்புறம், கிராமம், வயது வித்தியாசம் இல்லாமல் சகல தரப்பினரிடமும் ரத்தக் கொதிப்பு பிரச்சினை அதிக அளவில் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
ரத்தக்கொதிப்பை குறைப்பது குறித்து மதுரை மக்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

பாரபட்சம் பார்க்காமல்
ஏழை, பணக்காரர், ஆண்கள், பெண்கள் என்று பாரபட்சமே இல்லாமல் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டோர் மதுரையில் அதிகரித்து வருகின்றனராம்.

பெரும் உடல் நலக்கோளாறுகள் வரும்
ரத்தக்கொதிப்பு அதிகரிப்பதால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், உல் நல உபாதைகள் அதிகரிக்கும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனராம்.

நிலைமை மோசமாகிறது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் நிலைமை மோசமாகி வருவதை உணர முடியும் என்று டாக்டர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஒரே மாதத்தில் 3412 பேருக்கு ரத்தக் கொதிப்பு
கடந்த மாதம் 32,707 பேருக்கு ரத்தக் கொதிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 3412 பேருக்கு உயர் ரத்தக் கொதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம்.

ஜூன் மாதம் 2773 பேருக்கு
ஜூன் மாதம் நடந்த பரிசோதனையின்போது 25,562 பேருக்கு பரிசோதனை நடந்தது. அதில் 2773 பேருக்கு உயர் ரத்தக் கொதிப்பு இருந்தது தெரிய வந்தது.

தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்தால்
இது ராஜாஜி மருத்துவமனையில் மட்டும் தெரிய வந்த விவரம். ஒட்டுமொத்த தனியார் மருத்துவமனகளையும் கணக்கில் எடுத்தால் இந்த எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்கும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

30 வயதுக்கு மேல்
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதுதான் உடல் நலனுக்கு நல்லது என்பதும் அவர்களது அறிவுரையாகும்.

அறிகுறிகள் தெரியாது
ரத்த அழுத்தப் பிரச்சினைக்கு முன்கூட்டியே அறிகுறிகள் எதுவும் தெரியாது. வந்த பிறகுதான் பாதிப்பு தெரியும்.

மன அழுத்தம்.. வாழ்க்கை முறை...
மன அழுத்தம், வாழ்க்கை முறை, ஆரோக்கியமில்லாத சாப்பாடு, உடல் பருமன் போன்றவைதான் ரத்தக் கொதிப்புக்குக் காரணம். இவற்றில் தனி அக்கறை செலுத்தினாலே இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

வெளியில் சாப்பிடாதீர்கள்...
வீட்டுச்சாப்பாட்டையே பெரும்பாலும் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். வெளியில் விற்கப்படும் பாஸ்ட் புட் உணவுகள், எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது ஆபத்தானது என்பதும் டாக்டர்களின் அறிவுரையாகும்.

80 முதல் 120 வரை
சராசரியாக குறைந்தது 80 மற்றும் அதிகபட்சம் 120 என்ற அளவில் ரத்த அழுத்தம் இருக்கலாம்.அதில் குறையவும் கூடாது, கூடவும் கூடாது. இதை வீட்டிலேயே பரிசோதித்துப் பார்க்கும் அளவுக்கு நிறைய கருவிகள் வந்து விட்டன. ஆயிரம் ரூபாய்க்கே ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவிகள் கடைகளில் கிடைக்கின்றன.

ரத்த அழுத்தம் வந்தால் கிட்னிக்கும் ஆபத்து
ரத்த அழுத்தம் அதிகரித்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாம். எனவே இதில் கூடுதல் கவனம் தேவை என்பது டாக்டர்களின் எச்சரிக்கை.












Click it and Unblock the Notifications