தாயின் கை, கால்களைக் கட்டிக் கொன்று பேரலில் அடைத்த மகன் தானும் தற்கொலை
கிருஷ்ணகிரி: தாயுடன் ஏற்பட்ட தகராறில் அவரது வாயைப் பொத்தி, கை, கால்களைக் கட்டி கொலை செய்து பின்னர் எண்ணெய் நிரப்பும் பேரலில் போட்டு அடைத்து வைத்து விட்டுத் தப்ப முயன்ற ரவுடி பொதுமக்கள் தன்னைப் பிடிக்க முயன்றதால் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை அருகேயுள்ள கொப்பகரையைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் (51). அரசு பஸ் டிரைவர். இவருக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். இவரது மகன் ஜெயக்குமார் (30). திருமணமாகி மலர்(25) என்ற மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனர். ஜெயக்குமார் வேலைக்கு செல்லாமல் அடிதடி, தகராறு, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்று வந்தார். ரவுடி லிஸ்ட்டிலும் இருந்து வந்தார்.
மகனுக்கும், அர்ச்சுணனுக்கும் ஒத்துப் போகவில்லை. இதையடுத்து தனியாக போய் விட்டார் அர்ச்சுணன். அதேசமயம், ஜெயக்குமார் தனது தாயார் ராஜம்மாள், மனைவி, குழந்தைகளுடன் தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று ராஜம்மாளுக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சண்டைக்குப் பின்னர் ஜெயக்குமார் வீட்டை விட்டுப் போய் விட்டார். வீட்டுக்குள் நடந்த சண்டையால் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஜெயக்குமார் வேகமாக வெளியே போவதையும், வீடு பூட்டப்பட்டிருந்ததையும் பார்த்துவேகமாக உள்ளே புகுந்தனர்.
அங்கு ஒரு பேரலில் ராஜம்மாள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ராஜம்மாள் உடலை வெளியே எடுத்தபோதுதான் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்தனர். வாயைப் பொத்தி, கை, கால்களைக் கட்டிக் கொலை செய்துள்ளார் ஜெயக்குமார்.
இதையடுத்து ஜெயக்குமாரை ஊர் மக்கள் தேடினர். அப்போது அவர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததைப் பார்த்து வேகமாக சென்று அவரைப் பிடிக்க முயன்றனர். இதைப் பார்த்த ஜெயக்குமார் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீவைத்து வி்ட்டார்.
இதில் உடல் கருகி சில நிமிடங்களிலேய அவர் உயிரிழந்தார். போலீஸார் அவரது உடலையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications