மோடியை தவளை என்ற குர்ஷித் ஒரு கரப்பான்பூச்சி: பாஜக விளாசல்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தவளை என்று விமர்சித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பாஜக கரப்பான்பூச்சி என்று தாக்கியுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தவளை என்று விமர்சித்தார். இது குறித்து அவர் கூறுகையில், மோடி தற்போது தான் வெளியே வந்துள்ளார். முன்னதாக அவர் குஜராத்திற்குள் முடங்கி இருந்தார். தவளை தற்போது தான் கிணற்றை விட்டு வெளியே வந்துள்ளது. அவர் வெளி உலகை பார்த்து சற்று குழப்பத்தில் உள்ளார் என்று சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாக்ஷி லேகி கூறுகையில்,
குர்ஷித் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் போன்று இல்லை. அவர் வெளிநாட்டவர்களின் அமைச்சர் போன்று பேசுகிறார். பாகிஸ்தான் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதில் ஒரே ஒருவர் மட்டும் தான் உயிர் பிழைப்பார். அவர் தான் சல்மான் குர்ஷித். ஏனென்றால் அணு ஆயுத தாக்குதலில் இருந்து கரப்பான்பூச்சிகளால் மட்டும் தான் உயிர் பிழைக்க முடியும்.
பிறர் விமர்சிக்க எந்த பாஷையை பயன்படுத்துகிறார்களோ அதே பாஷையில் தான் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு புரிந்துகொள்ளும் சக்தி குறைவு. அதனால் அவர்களுக்கு புரியும் பாஷையில் தான் பேச வேண்டும் என்றார்.