இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தமிழர்கள்

இலங்கையில் தமிழர் பகுதிகளான வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில், வடக்கு மாகாண கவுன்சிலுக்கு முதன் முறையாக இப்போது தேர்தல் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
1988-ல் வடகிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் பின், 2006-ம் ஆண்டு இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத் தேர்தல் 2008-ல் நடைபெற்றது. இப்போது வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும், தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையே பிரதான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சில அமைப்புகளும், போரினால் பாதிக்கப்பட்ட அமைப்புகள் சிலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தேவைகளை கருத்தில் கொள்ளாமல் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சுயநல அரசியலில் ஈடுபட்டுவருவதாகாவும், இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை விற்க முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒருங்கிணைந்த அமைப்பு
இந்நிலையினை தடுக்கவும், தமிழ் அரசியல் தலைவர்கள் பொய்யான நிலைபாட்டுடன் இருந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருவதை தடுக்கவும், தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுவான அமைப்பாக மாற்றவும் முடிவு செய்துள்ள சில அமைப்புகள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பினரும், ஏற்கனவே இயங்கிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்துள்ள சில அமைப்புகளும் இணைந்து போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் - ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற பெயரில் புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.
இரட்டை இலை சின்னம்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விடியலுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் மறைந்த ஈழ தமிழர் தந்தை செல்வாவின் வழியில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இவர்கள் தங்களின் தேர்தல் சின்னமாக மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலையை அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications