தமிழகம், புதுச்சேரியில் 48 மணி நேரத்திற்கு லேசான மழை: ரமணன் தகவல்
சென்னை: ஆந்திரா அருகே வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை தற்போது சற்று தணிந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாகவும் வானத்தில் ஏற்படட மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் கடந்த 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பல இடங்களில், குறிப்பாக வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
நேற்று சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தற்போது கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் மீண்டும் பருவ மழை வலுத்துள்ளதாம். அதேசமயம், மேலடுக்கு சுழற்சியானது தற்போது தமிழக பகுதியை விட்டு நகர்ந்து விட்டதாம். எனவே பெரிய அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சுழற்சி காரணமாக கடலோர ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பலத்த மழை பெய்யும். மிக பலத்த மழை ராயலசீமாவில் பெய்யும். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் சில இடங்களிலும் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று (சனிக்கிழமை) மழைபெய்யும்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யும். புயல் எச்சரிக்கை ஏதும் இல்லை. தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் மழையை எதிர்பார்க்கமுடியாது. சென்னையில் இன்று காலை முதலே வெயில் அடித்து வருகிறது. சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.