நீர்மூழ்கிக் கப்பல் விபத்து.. 6வது உடல் கண்டுபிடிப்பு
மும்பை: தீவிபத்தில் சிக்கிய ஐஎன்எஸ் சிந்து ரக்ஷ்க் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து 6வது உடல் மீட்கப்பட்டுள்ளது.
கடுமையான சூழலையும் பொருட்படுத்தாமல் இந்தியக் கடற்படையின் மீட்புக் குழுவினர் கடுமையாக போராடியபடி இறந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர். இதுவரை 5 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது 6வது உடல் கிடைத்துள்ளது.
மொத்தம் 18 பேர் விபத்து நடந்தபோது கப்பலில் இருந்தனர். அத்தனை பேரும் உயிரிழந்து விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேரின் உடல்கள் கிடைத்து விட்டன.
நீரில் மூழ்கியபடி கிடக்கும் கப்பலுக்குள் கடற்படையின் நீச்சல் வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் நுழைந்து உடல்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கப்பலுக்குள் எந்த இடத்தையும் விடாமல் ஒவ்வொரு இன்ச்சாக இக்குழுவினர் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்த 18 வீரர்களில் 3 பேர் அதிகாரிகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.