ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் என்று கூறி விற்ற 6 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரியில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் என்று கூறி விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர், ஒரு பெண் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று தமிழகத்தில் தொடங்கியது. இன்றுடன் முடிகிறது. இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் என்று கூறி விற்பனை செய்து தர்மபுரியில் 6 பேர் கைதாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், டிஇடி தேர்வில் கேட்கப்படும் வினாத்தாள் கிடைப்பதாக சிலர் ஆசை வார்த்தை கூறி தேர்வுக்கு தயாரானவர்களையும், அவர்களது உறவினர்களையும் ரகசியமாக அணுகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவரிடம் உத்தனபள்ளி டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக பணிபுரியும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கணபதி என்பவர், டிஇடி தகுதி தேர்வு வினாத்தாள் தருவதாகவும் வினாத்தாள் ரூ. 5 லட்சம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வினாத்தாளை 16ம் தேதி தர்மபுரி நான்கு ரோடு அருகே தருவதாகவும் வினாத்தாளை தரும் போது ஒரு லட்ச ரூபாயும் தேர்வு முடிந்த பின் 4 லட்சம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து சொன்னபடி தர்மபுரி அருகே ஒரு லட்ச ரூபாயுடன் அசோக்குமார் காத்திருந்தார். அப்போது, மேலும் சிலருடன் காரில் வந்த கணபதி, அசோக்குமாரிடம், ஒரு லட்ச ரூபாயை வாங்கி கொண்டு, சிறிது நேரத்தில் வினாத்தாளை எடுத்து வருவதாக கூறி சென்றார். ஆனால், அவர்கள் மீண்டும் வரவில்லை. அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் தர்மபுரி எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் மோசடி குறித்து தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க எஸ்.பி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர். இந்த வேட்டையில் கணபதி, கணபதியின் மனைவி எஸ்தர், ஓசூர் அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த கிருஷ்ணப்பா, ஓசூர் அடுத்த பஸ்தியை சேர்ந்த சந்திரசேகர், பாலக்கோட்டை அடுத்த ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த டாஸ்மாக் சேல்ஸ்மேன் அசோகன், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டு இளையராஜா ஆகிய ஆறு பேர் சிக்கினர்.
இளையராஜா குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வருகிறார். அசோகன் டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கிறார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ. 7.80 லட்சம் பணம் பறிமுதலானது. இவர்கள் வைத்திருந்த வினாத்தாள்கள் அனைத்தும் போலியானது என்றும் விசாரணையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications