பீரோவில் ஒன்றுமில்லை... ஆத்திரத்தில் ‘வீட்டைக்’ கொளுத்திய திருடர்கள்: 1.5 லட்சம் நாசம்
நெல்லை: நெல்லையில் வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்துப் பார்த்த திருடர்களுக்கு, உள்ளே வெறும் ரூ5000 மட்டுமே இருந்ததால், ஏமாற்றத்தில் வீட்டிற்குத் தீ வைத்தனர். இதில் வீட்டில் இருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
திருநேல்வேலி, டவுன் பகுதியில் கோடீஸ்வரன் நகர் 11வது தெருவில் வசித்து வருகிறார் ராஜா. இவரது மகனான சுரேஷ் என்ற 32வயது இளைஞர் கூலக்கடை பஜாரில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தினத்தன்று ராஜாவும் அவரது மனைவியும் நாகர்கோவில் சென்றிருந்தனர். சுரேஷும் பணி நிமித்தம் பட்டறையிலேயே தங்கி விட்டார்.
இதனை நோட்டமிட்ட கள்வர்கள், நகைப்பட்டறைகாரர் வீடு என்பதால் வீட்டில் நிச்சயம் நிறைய நகை இருக்கும் என்ற கற்பனையோடு வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பீரோவைக் கஷ்டப்பட்டு உடைத்துப் பார்த்ததில், அதில் வெறும் ஐயாயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. வீட்டைச் சல்லடை போட்டுத் தேடியும் வேறு நகையோ, பணமோ அவர்களுக்குச் சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருடர்கள் வீட்டின் இரு அறைகளுக்கும் தீ வைத்துள்ளனர்.
வீட்டில் புகை வருவதை அக்கம்பக்கத்தார் மூலம் அறிந்த சுரேஷ் பதறி ஓடி வந்து வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள கட்டில், பீரோ, ஏசி, பிரிட்ஜ் போன்ற பொருட்கள் தீயில் கருகி நாசமானது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் எனத் தெரிகிறது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயலாற்றி தீயை அணைத்தனர். திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட பொருள் கிடைக்காத ஆத்திரத்தில் திருடர்கள் வீட்டிற்குத் தீ வைத்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications