தாதா நகரில் ஏண்டா பஸ்ஸை நிறுத்தலே... டிரைவரைப் போட்டுத் தாக்கிய அப்பா, மகன்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாங்கள் சொன்ன இடத்தில் அரசுப் பேருந்தை நிறுத்ததால் கோபமடைந்த ஒரு பயணியும், அவரது மகனும் சேர்ந்து டிரைவரை தாக்கினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரையிலிருந்து போச்சம்பள்ளிக்கு யூ-16 என்ற அரசுப் பேருந்து சனிக்கிழமை போய்க் கொண்டிருந்தது. போச்சம்பள்ளியை அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்த ஒட்டுனர் வாசுதேவன் என்பவர் ஓட்டியுள்ளார்.
கொடமாண்டிப்பட்டி என்ற இடத்தில் இரண்டு பேர் பேருந்தில் ஏறினர். பேருந்து கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் தாதா நகரில் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் அங்கு ஸ்டாப் இல்லை என்று கூறிய டிரைவர், வாழைத்தோட்டம் என்ற ஸ்டாப்பிங்கில் பேருந்தை நிறுத்துவதாக கூறினார்.
ஆனால் அதற்குள் கோபமடைந்த அந்த இருவரும், டிரைவர் வாசுதேவனை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் இறங்கி ஓடி விட்டனர். இதுகுறித்து வாசுதேவன் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் தாக்குதல் நடத்திய இருவரையும் தேடிக் கைது செய்தனர்.
அவர்களது பெயர் பாஷா அகமது, அவரது மகன் ரபீக் என்பதாகும். இருவரையும் கோர்ட்டில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications