பாகிஸ்தான்: அவாமி கட்சி மூத்த பெண் அரசியல்வாதி தாலிபன்களால் சுட்டுக்கொலை
பெஷாவர்: பாகிஸ்தானில் அவாமி நேஷனல் பரி கட்சியின் மூத்த உறுப்பினரான பெண் அரசியல்வாதி ஒருவர் நேற்றிரவு தாலிபன் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு முதல் சமீபத்தில் நடந்த தேர்தல்கள் வரை அவாமி கட்சி, ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது. ஆனபோதும், இந்தக் கட்சியின் செயல்வீரர்கள் பலரும் தலிபான்களின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர்.
அவாமி கட்சியின் மூத்த உறுப்பினரான நஜ்மா ஹனிப் என்ற 35 வயது பெண் அரசியல்வாதி பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் வசித்து வருகிறார். ஏற்கனவே இவரது கணவர், மகன் மற்றும் பாதுகாவலர்கள் கடந்த 2011ம் ஆண்டு தாலிபான் தற்கொலைப்படை வீரன் ஒருவனால் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தனிமையில் வசித்து வந்த ஹனிப்பை நேற்றிரவு படுகொலை செய்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள். சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கியால் சுட்டதால் அவரைச் சுட்ட சத்தம் வெளியில் கேட்கவில்லையாம். ஹனிப்பின் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என மூத்த காவல்துறை அதிகாரி முகமது பைசல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தலிபான்கள் ஆட்சி நடத்தியபோது, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அவர்களது ராணுவ நடவடிக்கையை அவாமி நேஷனல் பரி கட்சி விமர்சனம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பழிவாங்கலாகக் கூட இந்த படுகொலை நடத்தப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறாது.