விஎச்பியின் அயோத்தி யாத்திரைக்கு உ.பி. அரசு அதிரடி தடை
லக்னோ: விஸ்வ இந்து பரிஷத், பாஜக தலைவர்கள், துறவிகள் கொண்ட குழுவினர் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவைப் பார்த்து விட்டு வந்த கையோடு விஎச்பி அறிவித்த அயோத்தி யாத்திரைக்கு உ.பி. அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக முஸ்லீம் தலைவர்களுடன் பேசுவதாக முலாயம் சிங் யாதவ் உறுதியளித்தார் என்று இந்த தலைவர்கள் கூறியிருந்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் முலாயம் தரப்பில் உடனடியாக இதை மறுத்து விட்டனர். முலாயம் சிங் முஸ்லீம் தலைவர்களுடன் இதுகுறித்துப் பேச மாட்டார், இதில் தலையிட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் அயோத்திக்கு யாத்திரை மேற்கொள்ளப் போவதாக விஎச்பி அறிவித்தது. இதற்கு உ.பி. அரசு அனுமதி மறுத்துள்ளது. முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ்தான் உ.பி. முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துறவிகள், மடாதிபதிகள் சகிதம் இந்த யாத்திரையை மேற்கொள்ளப் போவதாக விஎச்பி அறிவித்துள்ளது. ராமர்கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும்வகையில் இந்த யாத்திரைக்கு அது திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு உ.பி. அரசு அனுமதி மறுத்துள்ளது.
முன்னதாக சமாஜ்வாடி கட்சியின் முக்கியத் தலைவரும், முலாயமுக்கு நெருக்கமானவரும், அமைச்சருமான அஸம் கான் கூறுகையில், சந்தர்ப்பவாத விஎச்பி போன்ற அமைப்புகளுடன் எங்களது தலைவர் கை கோர்க்க மாட்டார். அப்படி செய்தால் அது முஸ்லீம்களிடையே தவறான செய்தியை கொண்டு சேர்த்து விடும் என்று கூறியிருந்தார். அவர் பேசிய சில மணி நேரங்களிலேயே விஎச்பி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு உத்தரவு உ.பி. அரசிடமிருந்து வெளியானது.












Click it and Unblock the Notifications