காங்கிரஸ், தேமுதிக கூட்டணி அவசியம்: வலியுறுத்திய திமுக மா.செ.க்கள்!
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான் வெல்ல முடியும் என்பது திமுக மாவட்ட செயலாளர்களின் கருத்தாக வெளிப்பட்டிருக்கிறது.

தென் மாவட்டங்களில் காங். அவசியம்:
சென்னையில் சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுவாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட செயலர்கள், காங்கிரஸின் வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது. அதனால் தென் மாவட்டங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று கூறியுள்ளனர்.

நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி...
குறிப்பாக திருச்சி நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி என மூத்த தலைவர்களே இக்கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கின்றனர்.

ஏன் காங்கிரஸ்...?
இன்னும் சிலரோ, பாரதிய ஜனதா கட்சியோ மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்.. அதனால் என்னதான் கோபம் இருந்தாலும் தென் மாவட்ட மீனவர் சமூகம் மோடியை ஆதரிக்காமல் காங்கிரஸையே ஆதரிக்கும் என்பதால் காங்கிரஸ் கூட்டணி அவசியமானது என்று பேசியுள்ளனர்.

தேமுதிகவை நாடலாம்... கோவை மண்டலம்:
கோவை மண்டலத்தைப் பொறுத்தவரையில் கொங்கு நாடு மக்கள் கட்சி போன்ற ஜாதியக் கட்சிகளுடன் கூட்டணி அறவே கூடாது என்று பேசினாலும் தேமுதிகவின் ஆதரவை நாடலாம் என்ற தொணியில் பேசியுள்ளனர்.

தேமுதிக ஆதரவு இருந்தால் போதும்:
வட தமிழகத்து திமுக மா.செ.க்களோ பொத்தாம் பொதுவாக காங்கிரஸ், தேமுதிக கூட்டணி அமைந்தால் நல்லது என்றும் காங்கிரஸ் பற்றி கவலை இல்லை..... தேமுதிக ஆதரவு இருந்தால் போதும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆ.ராசா, கனிமொழி...
வழக்கமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு எம்.பிக்களை அழைப்பது இல்லை. ஆனால் இம்முறை ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications