சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளில் விபத்து... தொழிலாளர்கள் தப்பினர்
விருதுநகர்: சிவகாசி அருகே இரு பட்டாசு ஆலைகளில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்தார். மதிய உணவு வேளை என்பதால் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிவகாசி அருகேயுள்ள எம்.துரைச்சாமிபுரத்தில் சிதம்பரம் பட்டாசு ஆலை உள்ளது. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி இன்று தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. 100க்கும் அதிகமான தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வானத்தில் போய் வெடித்து வர்ணஜாலம் காட்டும் 12 ஷாட் என்ற பேன்சி ரக பட்டாசுக்கான வெடி மருந்தை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். 12 ஷாட் பேன்சி வெடிக்கு தேவையான ‘ஷில்' எனபடும் வெடி மருந்து கலவையை தயார் செய்து அறைக்கு வெளியே வெயிலில் தொழிலாளர்கள் காய வைத்திருந்தனர்.
அப்போது மதிய உணவு வேளையான 12.30 மணி என்பதால் தொழிலாளர்கள் வெடி மருந்துகளை காயவைத்துவிட்டு சாப்பிட சென்று விட்டனர்.
நேரம் செல்லச்செல்ல உஷ்ணம் அதிகமாகவே சிறிது நேரத்தில் ‘ஷில்' வெடி மருந்து கலவை அதிக வெப்பத்தால் உஷ்ணமாகி வெடிக்க தொடங்கியது. இதில் பிற அறைகளுக்கும் தீ பரவத்தொடங்கியது.
இதில் 12க்கும் அதிகமான ஆறைகளில் தீ பரவி வெடிக்க தொடங்கின. இதில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட அச்சம்தவிழ்த்தான் என்ற கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவரது மனைவி கனிபாப்பாவுக்கு (50) இடது கால் மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பறந்து போன ராக்கெட் வெடி
அதுபோல் சிதம்பரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு ராக்கெட் வெடி அருகே உள்ள கிருஷ்ணசாமி என்ற பட்டாசு ஆலையில் போய் வெடித்தது. உடனே அங்கும் தீ மளமளவென்று பரவி சில அறைகளில் இருந்த பட்டாசுகள் வெடிக்க தொடங்கின.
ஆனால் மதிய சாப்பாடு வேளை என்பதால் வெடி விபத்து ஏற்பட்டதும் 100க்கும் அதிகமான தொழிலாளர்கள் உடனே அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் பல அறைகள் தொடர்ந்து வெடித்ததால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு சிவகாசி அருகே முதலிபட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications