டீ விளம்பரத்தால் வந்த வினை... ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்
குவாலியர்: விளம்பரத்தைப் பார்த்து விளையாட்டாய் தெர்மாமீட்டரை குழம்பில் விட்ட சிறுமியும், அவளது சகோதரனும் பாதரசம் கலந்த உணவைச் சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
விளம்பரங்களில் வியாபார யுக்திக்காக எதையாவது சொல்லி விட்டுப் போக அதை விபரமறியா பிஞ்சுக் குழந்தைகள் செயல் வடிவம் கொடுத்து ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்கின்றன.
குழந்தைகள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் அல்லது இண்டர் நெட்டில் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் எப்போதும் கண்காணித்த வண்ணமே இருக்க வேண்டும் என்பதற்கு குவாலியரில் நடந்த இந்தச் சம்பவமே மிகப் பெரிய உதாரணம்.
இரவு உணாவு...
குவாலியர் கோசிப்புறா பகுதியைச் சேர்ந்த தில்கா என்ற 12 வயது சிறுமியும், அவளாது சகோதரன் 7 வயது ரிஹானும் கடந்த செவ்வாயன்று, டிவியைப் பார்த்துக் கொண்டே இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
டீத்தூள் விளம்பரம்...
அப்போது டீத்தூளுக்கான விளம்பரம் ஒன்றில் கணவர் தன் மனைவியை ஏமாற்றுவதற்காக சூடான தேநீரில் தெர்மாமீட்டர் வைத்து ஏமாற்றும் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பானது.
ஆர்வத்தில்...
அதைப்பார்த்த குழந்தைகளுக்கு தாங்களும் அதுபோல் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, உடனடியாக வீட்டில் இருந்த தெர்மாமீட்டரை எடுத்து சாப்பிட வைத்திருந்த சூடான குழம்பில் வைத்துள்ளனர்.
குழம்பில் பரவிய பாதரசம்...
அதிக சூடு பட்டதால், தெர்மாமீட்டர் உடைந்து, அதிலிருந்த பாதரசம் முழுவதும் குழம்பில் பரவி விட்டது. இதை அறியாத அக்குழந்தைகள் தொடர்ந்து அந்த உணவை சாப்பிட்டுள்ளனர். சிறிதுநேரத்தில் வாந்தி, வயிற்றுவலியால் குழந்தைகள் பாதிக்கப் பட பதறிப்போன பெர்றோர் அவர்களை அங்குள்ள கமலராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சாப்பாட்டுல பாதரசமா...
குழந்தைகளைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்களது உணவில் பாதரசம் கலந்திருந்தது கண்டு அதிர்ந்தனர். தகுந்த நேரத்தில் தரப்பட்ட சிகிச்சையால் தற்போது குணமாகி வருகின்றனர் அக்குழந்தைகள்.