சரக்கு விற்பதில் தகராறு... ரவுடி மலர்க்கொடிக்கு கத்திக்குத்து.. குணசுந்தரியும், சரவணனும் கைது!
சென்னை: டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது தொடர்பாக ஏற்பட்ட 'தொழில்' போட்டியில் பெண் ரவுடியை இன்னொரு பெண் ரவுடி கத்தியால் குத்தினார். இதையடுத்து அந்தப் பெண் ரவுடியையும், அவரது கணவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுப்பேட்டை அய்யாச்சாமி தெருவில் வசித்து வருபவர் மலர்க்கொடி. 38 வயதாகிறது. அந்த ஏரியாவில் இவர் ரவுடியாம். ரவுடி லிஸ்ட்டிலும் இருக்கிறாராம்.
இவரது தொழில் மது பான விற்பனைதான். அதாவது டாஸ்மாக் கடைகளுக்குப் போய் மதுவை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான குணசுந்தரி. இவரும் மலர்க்கொடி போலத்தான். சரக்கு விற்பதில் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் மூளுமாம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார் மலர்க்கொடி. அப்போது குணசுந்தரி தனது கணவர் சரவணனுடன் அங்கு வந்தார். தெருவில் வைத்தே மூவருக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது.
இந்த சண்டை பின்னர் அடிதடியாக மாறியது. மலர்க்கொடியும், குணசுந்தரியும் அடித்துக் கொண்டனர். அப்போது குணசுந்தரி தனது கணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மலர்க்கொடியை குத்தினார். அதேபோல சரவணனும் கத்தியைப் பிடுங்கி குத்தி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்தார் மலர்க்கொடி.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து மலர்க்கொடியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குணசுந்தரியையும், சரவணனையும் கைது செய்தனர்.
இந்த இரு பெண்களின் சண்டையால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.